சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயின் தற்போதைய மருத்துவ நிலைமை மற்றும் போராட்டம் குறித்துச் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, வாயினால் உண்பதைத் தவிர்த்தாலும், அவருக்குத் தேவையான அனைத்துப் போஷாக்குகளும் குருதி மூலமாகவும், குழாய் மூலமாகவும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
அவர் வாயினால் உண்பதை மட்டுமே தவிர்த்துள்ளாரே தவிர, பிற மருத்துவ வழிகளில் போஷாக்கு பெறுவதைத் தவிர்க்கவில்லை. பொதுவாக ஒருவர் 12 அல்லது 13 நாள்கள் உண்மையாகவே உணவின்றி இருந்தால், அவரால் இவ்வாறு இயல்பாக இருக்க முடியாது. எனவே, அவர் தற்போது மேற்கொண்டு வரும் செயல் ஓர் அர்த்தமற்ற நாடகமே தவிர வேறொன்றுமில்லை.
சுரேஷ் சலே ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானி மற்றும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியாவார். அவர் குற்றவாளிகளுக்கு உதவியாக அல்லது கடந்தகாலக் குற்றங்களை மூடிமறைத்துப் பாதுகாப்பதாகச் செயற்படாமல், தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தகுந்த சட்டபூர்வ அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதே முறையானதாகும். அவர் உண்மையை வெளிப்படுத்தினால், அது நாட்டுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் மிகவும் முக்கியமானது. – என்றும் மேலும் குறிப்பிட்டார்.


