உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் பாரதிராஜா தனது 84 ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த பாரதிராஜா, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், இன்று (10) அதிகாலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார்.
பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள். 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.
இயக்குநர் இமயம் பாரதிராஜா 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியுள்ளார்.
பதினாறு வயதினிலே (1977), சிகப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில் (1978), நிறம் மாறாத பூக்கள் (1979), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), புதுமைப் பெண் (1983), மண்வாசனை (1983), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1986), வேதம் புதிது (1987), ஆராதனா (1987), கொடி பறக்குது (1989), புது நெல்லு புது நாத்து (1991), நாடோடி தென்றல் (1992), கிழக்குச் சீமையிலே (1993), கருத்தம்மா (1995) உள்ளிட்ட திரைப்படங்கள் பாரதிராஜாவின் மிகவும் முக்கியமான படைப்புகளாகும்.


