Sunday, April 20, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

போராட்ட குழுவினரும் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளும் அம்பேத்கர் திடலில்தான் கூட்டத்தை நடத்துவோம் என மீண்டும் மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வலியுறுத்தினர். இதற்காக ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடலையும் தயார் செய்து வந்தனர். அம்பேத்கர் திடலில் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்களும் போராட்ட குழுவினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. அதன்படி அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டம் கூடாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வரவேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments