பெங்களூருவில் நடைபெற்ற விறுவிறுப்பான டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியா தகுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
தட்சிணேஷ்வர் சுரேஷின் அபார ஆட்டம்
இந்தத் தொடரின் நாயகனாக உருவெடுத்துள்ளார் 25 வயதான Dhakshineswar Suresh. இவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.
தீர்மானமிக்க கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் நெதர்லாந்தின் Guy de Ouden-ஐ 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இவரது இந்தச் செயல் 2004-ல் லியாண்டர் பயஸ் நிகழ்த்திய சாதனையை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.
இரட்டையர் பிரிவில் நீடித்த போராட்டம்
முன்னதாக, தட்சிணேஷ்வர் மற்றும் அனுபவ வீரர் Yuki Bhambri ஜோடி இரட்டையர் பிரிவில் களமிறங்கியது.
சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த மாரத்தான் ஆட்டத்தில் இந்திய ஜோடி 7-6, 3-6, 7-6 என்ற கணக்கில் நெதர்லாந்தின் சாண்டர் அரேண்ட்ஸ் மற்றும் டேவிட் பெல் ஜோடியை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இருப்பினும், இந்தியாவின் முன்னணி வீரர் சுமித் நாகல் தனது இரண்டு ஒற்றையர் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றமாக அமைந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி
டேவிஸ் கோப்பை 2026 (Davis Cup 2026) தகுதிச் சுற்றின் இந்தப் பிரம்மாண்ட வெற்றி, இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த முதல் எட்டு அணிகள் பங்கேற்கும் இறுதிச் சுற்றுக்கு (Finals) ஒருபடி அருகில் கொண்டு சென்றுள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன், தற்போது ஐரோப்பிய பலசாலியான நெதர்லாந்தையும் வீழ்த்தி இந்தியா தனது பலத்தை நிரூபித்துள்ளது.
அடுத்த இலக்கு: செப்டம்பர் போர்
தகுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றால், இந்தியா நேரடியாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
பெங்களூருவின் எஸ்.எம். கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் (SM Krishna Tennis Stadium) கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தியாவின் இந்த வரலாற்றுச் சாதனையை உற்சாகமாகக் கொண்டாடினர்.


