மத்திய பொதுப்பணி ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வு (CSE) குறித்த விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு அறிவிப்பில், ஏற்கனவே பணியில் உள்ள ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளுக்கான தேர்வு எழுதும் உரிமையில் சில முக்கியமான மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை UPSC அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு என பிரத்யேகமான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
முக்கிய தேதிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்
UPSC 2026 தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 04 முதல் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட (979 இடங்கள்) சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டுப்பாடுகள்: யாருக்குத் தடை?
ஏற்கனவே குடிமைப்பணிகளில் இணைந்துள்ள அதிகாரிகளுக்கு மீண்டும் தேர்வு எழுத கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
-
IAS மற்றும் IFS அதிகாரிகள்: முந்தைய தேர்வுகளின் மூலம் ஐஏஎஸ் அல்லது ஐஎஃப்எஸ் பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு, தற்போது பணியில் இருப்பவர்கள் 2026-ஆம் ஆண்டு தேர்வை எழுத முடியாது.
-
தேர்வின் இடையில் நியமனம் கிடைத்தால்: ஒருவேளை முதற்கட்டத் தேர்விற்குப் பிறகு, ஆனால் முதன்மைத் தேர்விற்கு முன்பாக ஒருவருக்கு ஐஏஎஸ் அல்லது ஐஎஃப்எஸ் நியமனம் கிடைத்தால், அவர் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.
-
முடிவுகளுக்கு முன்னதாக நியமனம்: முதன்மைத் தேர்வு எழுதி அதன் முடிவுகள் வருவதற்குள் நியமனம் கிடைத்தால், 2026-ஆம் ஆண்டுத் தேர்வின் அடிப்படையில் அவருக்கு எந்தப் பணியும் வழங்கப்படாது.
IPS அதிகாரிகளுக்கான சிறப்பு விதி
இந்த ஆண்டு ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஐபிஎஸ் பணியில் இருப்பவர்கள் 2026-ஆம் ஆண்டுத் தேர்வை எழுதலாம்.
ஆனால், அவர்கள் மீண்டும் ஐபிஎஸ் பணியைத் தனது விருப்பமாகத் (Option) தேர்வு செய்ய முடியாது.
அதாவது, ஒருமுறை ஐபிஎஸ் அதிகாரியாகிவிட்டால், மீண்டும் அதே பணியை 2026-ஆம் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் பெற முடியாது.
மீண்டும் தேர்வு எழுத ‘ஒரே ஒரு வாய்ப்பு’
2026-ஆம் ஆண்டுத் தேர்வில் ஐபிஎஸ் அல்லது இதர குரூப்-ஏ (Group A) பணிகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள், 2027-ஆம் ஆண்டு மீண்டும் தேர்வு எழுத விரும்பினால், அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன:
-
பயிற்சி விலக்கு (Training Exemption): சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து ‘ஒருமுறை மட்டும் வழங்கப்படும் பயிற்சி விலக்கு’ (one-time exemption from joining training) அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
-
பணி விலகல்: 2028 அல்லது அதற்குப் பிந்தைய தேர்வுகளை எழுத விரும்பினால், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் இருந்து கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும்.
ஒருமுறை வழங்கப்படும் சலுகை (One-time Opportunity)
2025 அல்லது அதற்கு முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏதேனும் ஒரு பணியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது எஞ்சியுள்ள வாய்ப்புகளை (Remaining attempts) பயன்படுத்தி, பணியில் இருந்து ராஜினாமா செய்யாமலேயே 2026 அல்லது 2027 தேர்வுகளை எழுதலாம்.
ஆனால், 2028-ஆம் ஆண்டு முதல் மீண்டும் தேர்வு எழுத வேண்டுமானால் ராஜினாமா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


