கனடாவில் துப்பாக்கிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்து நஷ்டஈடு பெறும் விசேட திட்டம் இன்று (19) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
திட்டத்தின் முக்கிய காலக்கெடு
மத்திய அரசாங்கத்தின் இந்த துப்பாக்கி மீட்புத் திட்டம் இன்று முதல் வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். கையில் வைத்துள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க விரும்புவோர் அல்லது அதனைச் செயலிழக்கச் செய்ய விரும்புவோர், எதிர்வரும் அக்டோபர் 30, 2026 ஆம் ஆண்டுக்குள் அதனை நிறைவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நஷ்டஈடு பெறுவது எப்படி?
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல், கனடா அரசாங்கம் AR-15 உள்ளிட்ட சுமார் 2,500 க்கும் மேற்பட்ட ‘தாக்குதல் வகை’ (Assault-style) துப்பாக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது.
-
பதிவு செய்யாத துப்பாக்கிகள்: இவற்றை வைத்திருப்பவர்கள் மார்ச் 31 ஆம் திகதிக்குள் விண்ணப்பித்து நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்.
-
நஷ்டஈட்டுத் தொகை: ஒரு துப்பாக்கியைச் செயலிழக்கச் செய்வதற்கு 400 முதல் 700 டாலர்கள் வரை பணம் வழங்கப்படும்.
-
பணம் கிடைக்கும் காலம்: துப்பாக்கியை அரசாங்கத்திடம் கையளித்த 45 நாட்களுக்குள் அதற்கான நஷ்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் அறிவிப்பு
இது குறித்து கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் காரி ஆனந்தசங்கரி கருத்துத் தெரிவிக்கையில், “தாக்குதல் வகை துப்பாக்கிகள் எமது சமூகத்திற்கு அவசியமற்றவை. இவை யுத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டவை. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவற்றைச் சமூகத்திலிருந்து அகற்றுவது எமது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சுயவிருப்பின் அடிப்படையிலானது என்றாலும், சட்டப்படி அவற்றைத் தொடர்ந்து வைத்திருப்பது குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


