தனுஷ்கோடி கடற்பரப்பில் தங்கி மீன்பிடித்த காரைக்கால் விசைப்படகு ஒன்றையும், அதிலிருந்த 14 மீனவர்களையும் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் வைத்து இன்று அதிகாலை அதிரடியாகச் சிறைபிடித்தனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவ சங்கப் பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களும் மனிதாபிமான அடிப்படையில் வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களின் விசைப்படகு மட்டும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. “எங்கட கடல் எல்லையில வந்து தங்கி மீன்பிடிக்கக்கூடாது” என்று ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறியதால் இந்தப் போராட்டம் வெடித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.
காரைக்கால் மீனவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன்பிடிப்பதால், ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வரத்து குறைவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதால், கோபமடையும் இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்யும் நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இரு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனுஷ்கோடி கடற்பரப்பில் இனி காரைக்கால் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க மாட்டார்கள் என உறுதி அளித்த பின்னரே படகு ஒப்படைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் தமிழக மீனவர்களே சக மீனவர்களைச் சிறைபிடித்த இச்சம்பவம் காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




