ஆழிப்பேரலை பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2004ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிலுள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
2004ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிலுள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கரையோர மக்களைப் பொறுத்தவரையில் அலைகள் ஒன்றும் புதிதல்ல. அதனால் அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர்.
எனினும், அந்த அலை, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவுகொள்ளும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 9.1 முதல் 9.3 மெக்னிடியுட் அளவில் பதிவானது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஆழிப்பேரலை அலைகள் சுமார் 30 மீட்டர் உயர எழுந்தன.
இதன் காரணமாக சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அன்று முதல் இன்று வரை 21வருடங்கள் ஆகின்ற போதிலும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி மறக்க முடியாத நாளாக அனைவரின் மனதிலும் பதிவாகி விட்டன.
இதன் விளைவு இலங்கையிலும் பாரியளவு பாதிப்பு ஏற்பட்டது. 35,000க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிந்து போயின.
இந்த நிலையில், இலங்கையில் 2005ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினம்” அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதற்கமைய, தேசிய பாதுகாப்பு தினம் இன்று காலை 8.30 முதல் முற்பகல் 11 மணி வரை காலியிலுள்ள ஆழிப்பேரலை நினைவிடத்தில் நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை மற்றும் ஏனைய பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தினத்தன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.



