கனடா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்திய வம்சாவளி நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான பிரஷாந்த் ஸ்ரீகுமார், கடுமையான மார்பு வலியால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை செய்யப்படாமல் 8 மணி நேரம் வலியுடன் போராடி உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் 22 அன்று, வேலை செய்யும் இடத்தில் மார்பு வலி ஏற்பட்டதால், பிரஷாந்த் தனது நண்பரின் உதவியுடன் Grey Nuns Community மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலையின் அவசர அறையில் (emergency room) பதிவு செய்யப்பட்ட அவர், காத்திருக்கும் இடத்தில் அமர வைக்கப்பட்டார்.
வைத்தியர்கள் ECG சோதனை செய்தபோதும், “பெரிதாக எதுவும் இல்லை” எனக் கூறி, அவரை தொடர்ந்து காத்திருக்க வைத்துள்ளனர்.
வலியால் துடித்த பிரசாந்திற்கு ‘டைலனோல்’ (Tylenol) மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது இரத்த அழுத்தம் மிகக் கடுமையாக உயர்ந்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 8 மணிநேரத்திற்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரசாந்த் சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்டார்.
அங்கு சென்ற 10 வினாடிகளிலேயே அவர் தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்து விழுந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட ‘மாரடைப்பு’ (Cardiac Arrest) மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீ குமார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்


