இரட்டை கொலையை மேற்கொண்டு மற்றுமொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று (03) நுரைச்சோலை காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது.
அதன்படி, நுரைச்சோலை காவல்துறை பிரிவின் நாவக்காடு பகுதியில் நேற்று (03) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆணொருவரும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த ஆண் மற்றும் பெண்ணொருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
நாவக்காடு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவரும் , 35 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, காவல்துறையின் பாதுகாப்பில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரைச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


