தொடருந்து ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கோடூர சம்பவம் பிரித்தானியாவின் (United Kingdom) – கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ஓடும் தொடருந்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர்.
கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தை அடுத்து, அந்த தொடருந்தின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர்.
இந்த சம்பவத்தை “திகிலூட்டும்” சம்பவம் என்று வர்ணித்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹண்டிங்டன் அருகே ஒரு தொடருந்தில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். சமூகவலைத்தள பதிவொன்றிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன, அவசர சேவைகளின் நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தப் பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


