Tuesday, March 17, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்: காங்கிரஸ் புகார்!

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்: காங்கிரஸ் புகார்!

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்.பி. தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார். இதையடுத்து பாஜக எம்.பி.க்கள், ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்தார்.

இதையடுத்து பேரணியின்போது பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் 3 பேர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

‘நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது எங்களை பாஜகவினர் தடுத்துநிறுத்தினர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினர். ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல், அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். இதற்கு மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments