இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஜகத் ஜனனி மா உமியா கோவில் கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக உயரமான கோவில் என்ற பெருமையை பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில், சுமார் 1,500 துாண்களுடன், தரையில் இருந்து 504 அடி உயரத்தில் கட்டப்படுகிறது.
இந்த கோவில் கட்டுமான பணியில், அதானி நிறுவனத்தின் சிமென்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கான அடித்தளம் அமைக்கும் பணிநடைபெற்றது.
அதன்படி, அதானி சிமென்ட் நிறுவனம் மற்றும் ‘பி.எஸ்.பி., இன்ப்ரா’ நிறுவனம் இணைந்து அடித்தளம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்காக, அதானி சிமென்டின் தனியுரிம கலவையான 24,100 கன மீட்டர் உடைய ‘ஈக்கோ மேக்ஸ் எம். – 45’ எனப்படும் கார்பன் கான்கிரீட்டை பயன்படுத்தி அடித்தளம் அமைக்கப்பட்டது.

600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து, 54 மணி நேரம் எடுத்து இந்த அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 450 அடி நீளம், 400 அடி அகலம், 08 அடி ஆழம் என்ற கணக்கில் இந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டமைப்பின் வெப்ப அழுத்தத்தை குறைக்கும் வகையில், 28 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் வெப்பநிலையை வைக்கும் வகையில், அடித்தளத்தில் ‘கூல்கிரீட் பார்முலேஷன்’ பயன் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் அமைக்கும் பணி, ‘கோல்டன் புக் ஓப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ்’ என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


