தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், டிஜிட்டல் கைது மோசடிக்குள்ளாகிய ஓய்வுபெற்ற 76 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
செப்டம்பர் 6 ஆம் தேதி, அவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள், மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தகவல் கொடுத்து அவரை மிரட்டினர். அவர்கள், ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களையும் பெங்களூரு காவல்துறை லோகோவை காட்டி நம்ப வைக்க முயன்றனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் மருத்துவரின் ஓய்வூதியக் கணக்கில் இருந்த ரூ.6.6 லட்சத்தை மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
மோசடி செயல்பாடுகள் நடக்கும்போது, வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது. இரண்டு நாட்கள் அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர், இறுதியில் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மரணத்திற்கு பிறகும், மோசடிக்காரர்கள் மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர். குடும்பத்தினர் புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


