கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு வகையான வெளிநாட்டு பாம்புகளை கடத்த முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத்துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் உயிரியல் பல்வகைமை, பண்பாடு மற்றும் தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் பிரிவு இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றது.
சுங்கத் துறையினரின் தகவலின்படி, 40 வயதுடைய அந்தப் பெண், பாங்காக்கில் இருந்து சென்னையை வழியாக வந்த IndiGo Airlines நிறுவனத்தின் 6E1173 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்திருந்தார்.
அவரது பயணப்பையை சோதனை செய்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஸ்பெக்லட் கிங்ஸ்நேக், யெல்லோ அனகொண்டா, ஹொண்டுரான் மில்க் ஸ்நேக்ஸ் மற்றும் பால் பைதான் உள்ளிட்ட பாம்பு இனங்கள் அடங்கும்.
இந்நிலையில், சுங்கச் சட்டம், விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம், மேலும் விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


