குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிணை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன், இச்சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, இச்சந்தேகநபர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற பிரதிவாதியைப் பொருத்தமான சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


