நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கியதாகக் கூறப்படும் கணவன், பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 43 வயதுடைய பெண், பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கோடரியால் தாக்கிய பின்னர் தானே பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததாக 32 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


