நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அங்கு மனித உயிர்கள் பறிபோனது குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அங்கு சென்று என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவர் மீதும் பழி சுமத்த நான் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


