மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத்திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடத்தப்பட்டு மற்றும் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த வருடம் இதே நாளில் (ஜூன் 28) செம்மணிச் சந்தியில் “அணையா விளக்கு” போராட்டம் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று நடத்தப்படும் இந்த “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வானது, கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரதான ஆறு அம்சக் கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தி, நீதி கோரும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


