பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக 500 தேயிலை கிராமங்கள் வேலைத்திட்டம், பனை அபிவிருத்தி திட்டங்கள் என்பன வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்னை முக்கோண அபிவிருத்தியைப் போலவே இளநீர் கிராமம் -250 செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையிலும் நேற்று (02) குருநாகல்-மஹாயாய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட Ceylon King Coconut Villages-250 தேசிய திட்டம் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.
பொருளாதாரத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தவே நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். என்றார்.
இதற்கமைய, “2026ஆம் ஆண்டில் 75 கிராமங்களும், 2027ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன.
இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


