இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமின் மூலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான இரத்தத்தை வழங்கி, மனிதாபிமானப் பணியில் பங்களிப்புச் செய்வதே பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
பொலிஸார் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதுடன் மட்டுப்படாமல், பொதுமக்களின் தேவைகளில் அக்கறை கொண்டு சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் பிரிகேடியர் சாகர பெரேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பொதுமக்கள் பாதுகாப்புக் குழு ஆலோசனைச் சபையும் ஹட்டன் தலைமையக பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


