ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய திசைகாட்டி அரசானது ராஜபக்ஷ குடும்பத்தினரைப் பழிவாங்கும் ஒற்றை நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு நாளும் எம்மைக் குறிவைத்து ஏதாவதொரு வகையில் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலில் சிக்கியுள்ள நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசு எவ்வித முறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அரசின் இத்தகைய பழிவாங்கல் அரசியல் போக்கு மற்றும் பொருளாதாரத் தோல்விகள் காரணமாக, தற்போதைய ஆட்சியின் மீது நாட்டு மக்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கடுமையான அதிருப்தியடைந்துள்ளனர்.” – என்றார்.


