அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளதை, அழிந்து வரும் ஊழல்வாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மாணவர் வீரர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து தப்பிப் பிழைத்து, களனிப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து, அங்கு சோசலிச மாணவர் சங்கத்தை மீண்டும் கட்டியெழுப்பியவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க ஆவார்.
அடக்குமுறைகளுக்குப் பிந்தைய அந்த அமைப்பின் முதலாவது தேசிய அமைப்பாளராகச் செயற்பட்ட அவரே, இன்று இந்த நாட்டை ஆட்சி செய்யும், உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கும் உன்னத தலைவராக விளங்குகின்றார். இதனை எண்ணி நாம் அனைவரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும்.” – என்றார்.


