டுபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஐ.சி.சி நடத்தை விதியை மீறியதற்காகப் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனாவிற்குப் போட்டித் தொகையிலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய இன்னிங்ஸின் 2ஆவது ஓவரில், தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பாத்திமா சனா, அவரை பெவிலியன் நோக்கிச் செல்லுமாறு கைசைகை காட்டியுள்ளார்.
துடுப்பாட்ட வீராங்கனை ஆட்டமிழந்து செல்லும்போது கோபத்தை தூண்டும் வகையிலான சைகைகளைச் செய்ததற்காக ஐ.சி.சியின் ‘பிரிவு 2.5’ விதிமுறையின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
இதன்படி அபராதத்துடன் சேர்த்து பாத்திமா சனாவிற்கு ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இவர் பெறும் 2ஆவது டிமெரிட் புள்ளி இதுவாகும்.
போட்டி நடுவர் சுப்ரியா ராணி தாஸ் விதித்த இந்தத் தண்டனையைப் பாத்திமா சனா ஒப்புக்கொண்டதால், மேலதிக விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.
24 மாத காலப்பகுதிக்குள் ஒரு வீரர் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அவர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கும் ‘சஸ்பென்ஷன்’ புள்ளிகளாக அவை மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் வீரர்களின் இத்தகைய கட்டுப்பாடற்ற செயல்கள் ஐ.சி.சியினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


