நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக தரையில் கிடந்த பணப்பையை மீட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், அதனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஆனந்தா (18915), இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
பணப்பையில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அதன் உரிமையாளரை அடையாளம் கண்ட பொலிஸ் அதிகாரி, நேற்று (01) காலை அவரை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பணப்பையை ஒப்படைத்துள்ளார்.
யதியந்தோட்டம், கோமடுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரங்க விதான என்பவரே பணப்பையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 31ஆம் திகதி இரவு நுவரெலியா நகருக்கு வந்திருந்தபோது பணப்பை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பையில் 1,500 ரூபாய் பணத்துடன், தங்க மோதிரத்தில் பதிப்பதற்காக 15,000 ரூபாய்க்கு வாங்கியிருந்த இரத்தினக்கல் ஒன்றும், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இருந்துள்ளன.
உரிய விசாரணைகளின் பின்னர், நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரொஷான் கூரே மற்றும் நிர்வாகப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச ஆகியோரின் முன்னிலையில் பணப்பை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


