கூகுள் நிறுவனம் ஜூலை 23 அன்று புதிய ‘செல்ஃபி வீடியோ உள்நுழைவு’ (Selfie Video Sign-in) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்களின் கணக்குகளில் உள்நுழைவதற்கோ அல்லது கடவுச்சொல்லை (Password) மறந்த நிலை, பயன்படுத்திய சாதனங்களை அணுக முடியாத நிலை போன்ற நேரங்களில் கணக்கை மீட்பதற்கோ (Account Recovery) மற்றொரு கூடுதல் வழிமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்திற்குச் சொந்தமான கூகுள், பயனர்கள் தங்களின் தலையை வெவ்வேறு கோணங்களில் அசைத்து ஒரு சிறிய வீடியோவை பதிவு செய்வதன் மூலம் இந்தச் சரிபார்ப்பு முறையை அமைக்க அனுமதிக்கும்.
கூகுள் அந்தப் பதிவைச் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னர் பயனர்கள் உள்நுழைய முயலும் போது பதிவேற்றும் நேரடி வீடியோக்களுடன் ஒப்பிட்டு கணக்கை உறுதிசெய்யப் பயன்படுத்தும்.

இந்த புதிய வசதி, சாதனங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட சந்தர்ப்பங்களில் மோசடிகளுக்கு எதிரான பலமான பாதுகாப்பையும் சிறந்த கணக்கு மீட்பு வழிகளையும் வழங்கினாலும், உயிரியல் அளவீடு (Biometric Data) சேகரிப்பு மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (Privacy) குறித்த சில கவலைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், இந்தச் செல்ஃபி வீடியோ பயனரின் சம்மதத்துடன் மட்டுமே சேமிக்கப்படுவதாகவும், பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கிலிருந்து இதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும், பயனர் பிற தேவைகளுக்காகப் பகிர விருப்பம் தெரிவித்தால் தவிர, இந்த வீடியோ உள்நுழைவு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
புதிய பதிவை சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிடுவதுடன், வீடியோ நேரலையானதுதானா என்பதை உறுதிப்படுத்த பயனர்களைச் சில அசைவுகளைச் செய்யக் கோருவதன் மூலம், ‘டீப்ஃபேக்’ (Deepfakes) உட்பட ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிய பல பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் மேலும் சேர்த்துக் கூறியுள்ளது.
தகுதியுள்ள கூகுள் கணக்குப் பயனர்களுக்கு இந்த வசதி ஜூலை 23 முதல் கிடைக்கிறது.
தற்போது நிறுவனங்கள் கணக்கு மீட்பு நடைமுறைகளுக்கு நம்பகமான சாதனங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள், மீட்புத் தொடர்புகள் மற்றும் இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) ஆகியவற்றையே நம்பியுள்ளன.
உயிரியல் அளவீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் (Facial Recognition) நீண்டகாலமாகவே தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குரிய தலைப்பாக இருந்து வருகின்றன.


