ரயில்வே திணைக்களத்தில் நிலவி வரும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய ரயில்வே பொது முகாமையாளரை உடனடியாக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) தெரிவித்துள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நிச்சயமாக இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளில் ஏற்படும் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் சங்கங்களும் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் தலைமையில் நாளை (14) கலந்துரையாடல் நடத்த ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், திட்டமிட்டபடி செப்டெம்பர் 17ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


