Sunday, September 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கப் பதக்கப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கப் பதக்கப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது.

20-20 ஓவர் வடிவில் நடைபெறும் இப்போட்டித் தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில், சக்திவாய்ந்த பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நிஷின்ஹி கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அணித்தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைக் குவித்தார். 50 பந்துகளை எதிர்கொண்ட இவரது அதிரடி இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய ஹசினி பெரேரா 26 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார். இவரது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

இவ்விருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரைஇறுதிப் போட்டி இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நடைபெறவுள்ளதுடன், அதில் வெற்றிபெறும் அணி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்த்து மோதவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments