Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய்

ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய்

கடந்த 2015ல் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘புலி’ என்கிற பேண்டஸி திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வெற்றியை பெற தவறிய இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்ல கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கிச்சா சுதீப்.

இதுகுறித்து அவர் கூறும்போது “புலி படத்தில் வில்லனாக என்னை நடிக்க அழைத்த போது அதில் நடிக்க வேண்டுமா என தயங்கினேன். ஆனால் படத்தின் இயக்குனர் இந்த படத்தில் நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியதால் அதை மதித்து ஒப்புக்கொண்டேன். அப்படி முதல் நாள் முதல் காட்சியில் நடிப்பதற்காக என்னை தயார் செய்து கொண்டு காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தபோது என் எதிரில் ஸ்ரீதேவி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து அதிர்ந்து போனேன். காரணம் அப்போதுதான் அந்த படத்தில் ஸ்ரீதேவி நடிக்க இருக்கிறார் என்கிற விஷயமே எனக்கு தெரிய வந்தது.

நான், ஸ்ரீதேவி, விஜய் மூவரும் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, ஸ்ரீதேவியை பார்த்த அந்த இன்ப அதிர்ச்சியில் நான் பேச வேண்டிய வசனத்தை மறந்து போய் அப்படியே நின்றேன். என் அருகில் நின்றிருந்த விஜய் மெதுவான வார்த்தைகளில் ப்ரோ நீங்கள் தான் டயலாக் பேச வேண்டும் என என்னை உஷார் படுத்தினார். ஓரிருமுறை அவர் அப்படி கூறியதும் தான், நான் இப்படி வசனம் பேச மறந்து போய் நின்றது எனக்கு புரிந்தது. அதற்குள் ஸ்ரீதேவியும் என்ன நடக்கிறது என்று கேட்டார். அதன் பிறகு தான், ஒன்றும் இல்லை.. ஸ்ரீதேவியை முதன் முதலில் பார்த்ததால் அவருடன் நடிக்க போகும் இன்ப அதிர்ச்சியில் இப்படி நடந்து விட்டது. வேறு ஒன்றும் இல்லை என்று கூறி அடுத்த டேக்கில் சரியாக நடித்து முடித்தேன்” என்று கூறியுள்ளார் சுதீப்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments