Friday, August 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயில் முழுமையாகச் செயற்பட வேண்டும் -ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயில் முழுமையாகச் செயற்பட வேண்டும் -ஆளுநர் நா.வேதநாயகன்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

இதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம், அதன் நடைமுறைப்படுத்தலில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத் தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலில், இப்பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும் முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும் பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

முகாமைத்துவக் கழகம் மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின் நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments