Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யானையிடமிருந்து உயிர் தப்ப ஆற்றில் குதித்த தந்தையும் மகனும் - சிறுவன் வெளியில் வந்த நிலையில்...

யானையிடமிருந்து உயிர் தப்ப ஆற்றில் குதித்த தந்தையும் மகனும் – சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தை நீரில் மாயம்!

காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையிடமிருந்து உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்து நிலையில் தந்தை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக சம்பவதினமான காலை 9 மணியளவில் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு யானையை கண்டு அதில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து நீரில் மூழ்கிய 14 வயது சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தை நீரில் இருந்து வெளிவராததையிட்டு அவரை தேடிய நிலையில் அவரை ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளதையடுத்து அங்கிருந்து சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசார் கடற்படை உதவியுடன் உறவினர்களும் இணைந்து அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியானாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments