Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமியின் குடும்பத்திற்கு வீடு - முதலமைச்சர் வழங்கினார்

முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமியின் குடும்பத்திற்கு வீடு – முதலமைச்சர் வழங்கினார்

முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தான்யாவின் தாயார் சவுபாக்யாவுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவி மற்றும் மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலி ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியை சேர்ந்த சவுபாக்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா என்பவர் முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் முதல்-அமைச்சர், சிறுமி தான்யாவின் உடல் நிலையினை கருதி அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் 3 சென்ட் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும், அந்த மனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டி முடிக்கப்பட்டு, அவ்வீட்டிற்கான சாவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் சவுபாக்யாவிடம் வழங்கினார். தனக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கியதற்காக சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோர் முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த அனுசுயா என்னும் மாற்றுத்திறனாளி, தனது உடல்நிலை குறித்து தெரிவித்து தானியங்கி சக்கர நாற்காலி வழங்கிட வேண்டி தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர், இன்றைய தினம் அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட அனுசுயா, முதல்-அமைச்சருக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமை செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments