சுரேஷ் சலே எவ்வித நீதிமன்ற உத்தரவோ அல்லது முறையான சான்றுகளோ இன்றி கைது செய்யப்பட்டு, கொடூரமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காகத் தேசிய அளவில் 7 ஆணைக்குழுக்களும், சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் எவ்.பி.ஐ. உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற புலனாய்வு அமைப்புகளும் 4 பிரத்தியேக விசாரணைகளை மேற்கொண்டு ஏற்கனவே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளன.
முறையான சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தால் அதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்ட விதம் கொடூரமானது.
எவ்வித நீதிமன்ற உத்தரவோ சான்றுகளோ இன்றி கைது செய்யப்பட்டு அநாகரிகமாக நடத்தப்படும் சுரேஷ் சலேயிடம், அண்மையில் பெறப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில், இந்தத் தொடர் சித்திரவதைகள் காரணமாக அவர் தற்கொலை செய்துகொள்ளும் கடுமையான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


