Monday, March 16, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தார் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தார் சுபான்ஷு சுக்லா

எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அதனை தொடர்ந்து ‘ஆக்சியம்-4’ என்ற பெயரில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் ஜூன் 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பம், வானிலை காரணமாக 6 முறை அது ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அனைத்து தொழில்நுட்ப பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, நேற்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம், ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். முன்னதாக விண்வெளிப் பயணத்தின் துவக்கத்தின்போது “ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்..” என்று முழங்கி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. இதனை தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் சென்ற இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் விதைகளின் விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு தாவரவியல் சார்ந்த ஆய்வுகளை சுபான்ஷு சுக்லா மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் ‘விண்வெளி விவசாயி’ என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த நிகழ்வை, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் கண்டு களித்தனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments