பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள மோதல்கள், ஏமன் நாட்டு மக்களுக்கும் உலகளாவிய சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக உணவுத் திட்டத்தின் (WFP) தற்காலிக நிர்வாக இயக்குநர் காரல் ஸ்காவ் (Carl Skau) எச்சரித்துள்ளார்.
மோதல்கள் மேலும் தீவிரமடைந்தால் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும், வறுமை அதிகரிக்கும் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதில் அதிக தடைகள் ஏற்படும் என காரல் ஸ்காவ் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை, செங்கடல் (Red Sea) மற்றும் கருங்கடல் (Black Sea) ஆகிய மூன்று முக்கிய கடல் வழிகளிலும் மோதல்கள் நிலவுவது, உலகளாவிய உணவு மற்றும் உரங்களின் விநியோகத்தை முடக்கியுள்ளது.
இந்த சூழலால் எரிபொருள் விலைகள் உயர்ந்து, உலகளவில் மேலும் பல கோடிக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினி நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏமன் மக்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இதற்கான தீர்வுகளைக் காண வேண்டும் என உலக உணவுத் திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.


