தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபின் வழிகாட்டுதலின் கீழ் ‘சலாம் ரமழான்’ நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பில் இந்த கலாசார விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சலாம் ரமழான் நிகழ்வு தொடர்பாக தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
சமூக நோக்கத்துடனும் முழு உலகிற்கும் தேசிய ஒற்றுமையை நிரூபிக்கும் நோக்கத்துடனும் இந்த ஆண்டு தேசிய ரமழான் பண்டிகையை சலாம் ரமழான் என்ற தொனிப்பொருளில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபின் வழிகாட்டுதலின் கீழ் மேல் மாகாண சபையால் நியமிக்கப்பட்ட தேசிய ரமழான் விழாக்குழு இதனை திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 31 வரை 10 நாட்களுக்கு கொழும்பு நகரத்தை மின் விளக்குகளால் அலங்கரித்து இந்த தேசிய விழாவுடன் இணைந்து கிரீன் பாத் வளாகத்தில் மூன்று நாள் கலாசார விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் கலாசார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் மற்றுமொரு பண்டிகையாக சலாம் ரமழான் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சலாம் ரமழான் ஏற்பாட்டுக்குழு, முஸ்லிம் மக்களின் பல்வேறு பாரம்பரிய மற்றும் காலார விழுமியங்கள் பற்றிய அடிப்படை புரிதலையும் அறிவையும் மேம்படுத்தும் ஒரு தனித்துவமான விழா என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விழாவின் மூலம் ஏனைய கலாசார விழாக்கள் கொண்டாடப்படுவது போன்று முழு சமூகத்தையும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஒன்றிணைத்து அதிக கூடிய பங்கேற்பு பொருளாதார பங்கேற்பு மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதலுடன் கொண்டாட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வைப் பற்றி கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர் ரிசான் நசீர், ரமழான் மாதம் என்பது வெறுமனே ஒரு மாதம் மட்டுமல்ல. அது எமது பாராம்பரிய கலாசார நெறிமுறைகள், உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய பல விடயங்கள் உள்ளடகியுள்ள நிலையில், இதை நாம் சமூகத்தின் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் உலகெங்கிலும் வாழும் வெவ்வேறு முஸ்லிம் கலாசாரங்கள் தொடர்பான பல விடயங்களைப் பற்றிய அறிவை சமூகத்துக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த விழாக்குழுவின் பிரதித்தலைவர் அமான் அஷ்ரப், இவ்வாறான கலாசார நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும் எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியாக இதனை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


