ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரிலிருந்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 தொடர் நேற்று (13) ஆரம்பமானது. டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு புதிதாக ஏற்பட்ட காயம் ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போதும் காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் காயமடைந்துள்ளார். இதனால், எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்பதும் சந்தேகமாகியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது வருண் சக்ரவர்த்தியும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடர் நிறைவடைந்த பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது


