பங்காளதேஷ் அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்தது.
கொழும்பு : மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பங்காளதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
பங்காளதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 129 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
பங்காளதேஷ் மகளிர் அணியில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பங்காளதேஷ் அணி துடுப்பெடுத்தாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருப்யா ஹைதர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் பங்காளதேஷ் அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


