வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள பகுதி அளவிலான கடல்சார் முற்றுகை, சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் நால்வர் கூட்டாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
கரீபியன் கடற்பரப்பில் பாரிய இராணுவப் படைகளைக் குவித்து, வெனிசுலாவின் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா மறித்து வருகிறது. இது, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
தன்னிச்சையான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதற்காக இத்தகைய இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், 1974-ஆம் ஆண்டின் சர்வதேச ஆக்கிரமிப்பு வரையறையின்படி சட்டவிரோதமானது என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்த விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் உடனடியாகத் தலையிட்டு, மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான இந்த முற்றுகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெனிசுலா தனது எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
அதேவேளை, உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள தமது நாட்டின் வளங்களைக் கைப்பற்றவே அமெரிக்கா இத்தகைய சதித்திட்டங்களை முன்னெடுப்பதாக வெனிசுலா அரசு குற்றம் சுமத்தி வருகிறது.


