TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, நிகழ்நிலை (Online) முறை மூலம் அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ.பி.குணதுங்ஹ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, பிராந்திய ஆணையாளர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
அண்மைய நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது குறித்து அரசாங்க அதிபர் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியமைக்காக, ஆணையாளர் இதன்போது தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச்சட்டத்தின்படி, புதிய வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு, கட்டடத் திட்ட ஒப்புதலைப் பெறுவதற்கு, மோட்டார் வாகனப் பதிவு மற்றும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு, நிலப் பதிவு அல்லது உரிமை மாற்றத்திற்கு மற்றும் கடன் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஏற்கனவே பதிவு செய்திருப்பவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று OTP இலக்கத்தைப் பெற்றுத் தங்களது TIN இலக்கத்தைப் பார்வையிட முடியும்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள், www.ird.gov.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ அல்லது விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பதிவுகளுக்கான சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலதிக விபரங்களுக்கு 021-2217333 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும் பிராந்திய ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


