ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வரைவுத் தீர்மானம் குறித்து இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், ஐ.நா. சபையிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவ்விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அதேவேளை, மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டை இருவரும் வரவேற்றதாகவும், இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றிய ஏனைய நாடுகளின் தூதுவர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


