நடிகை விஜயலட்சுமி தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்தமைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உச்ச நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்
“எனது சொல் மற்றும் செயல்களால் நடிகை விஜயலட்சுமிக்கு மனவருத்தம், காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன்.
விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று நடிகை விஜயலட்சுமி தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது.
சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இரு தரப்பும் எந்த ஒரு வழக்கையும் இதற்கு மேலாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் சீமானுக்கு எதிரான முறைப்பாட்டை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


