முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசு குடியிருப்புகள் நீக்கப்படும். இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தமது உத்தியோகபூர்வ வீடுகளை காலி செய்ய வேண்டியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள இல்லத்தின் மாதாந்திர வாடகை மதிப்பு ரூ. 4.6 மில்லியனைத் தாண்டுகிறது என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அரசு குடியிருப்புகளைப் பயன்படுத்தவில்லை என்பதால், இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்.
புதிய மசோதா ஓய்வூதியப் பலன்களைத் தொடர்ந்தும் வழங்குவதோடு, முன்னாள் தலைவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசாங்க சொத்துக்களை மீண்டும் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக ஒதுக்குகிறது.
அரசியல் பழிவாங்கல் என சிலர் குற்றம் சாட்டினாலும், முறையாக கோரப்பட்டால் இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்துள்ளார்.


