நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மக்களும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மன்னார் தீவு பகுதியில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.



பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்ததோடு, தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.தற்போது மழை வெள்ளம் குறைவடைந்த நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களை நோக்கி நகர்ந்துள்ளனர் .
இந்த நிலையில் குறித்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹெட்டியாராச்சி இன் வேண்டு கோளுக்கு அமைவாக கொழும்பு பிரதேச வர்த்தகர்களின் உதவியுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) மதியம் குறித்த பிரதேச மக்களுக்கு எமில் நகர் கிராம அலுவலரின் பங்களிப்புடன் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் போது உதவிகளை வழங்கும் வர்த்தகர்கள் வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் எரிக் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு எமில்நகர் கிராம மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது.
அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறுவர்கள், பெண்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கான ஆடைகள், காலணிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எமில் நகர் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவிகள் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


