இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற டிரிங்ஸ் பார்ட்டி ஒன்றில், பிரித்வி ஷாவுக்கும் நடிகை சப்னா கில் அவர்களின் நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்ஃபி எடுக்க முயற்சித்ததில் வாக்குவாதம் உருவாகி, அடிதடியில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பிரித்வி ஷா காயமின்றி தப்பினார். ஆனால் அவரது நண்பர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், பிரித்வி ஷாவின் நண்பரை 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக சப்னா கில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், பிரித்வி ஷா தன்னிடம் உடல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சப்னா கில் புகார் அளித்தார். எனினும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிராக சப்னா கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், நீதிமன்றம் பலமுறை பிரித்வி ஷாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விளக்கம் அளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த விசாரணையிலும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை மீறியதற்காக, நீதிமன்றம் பிரித்வி ஷாவுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அடுத்த விசாரணைக்கு அவர் கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அடுத்த விசாரணை டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


