மும்பை மற்றும் பாராளுமன்ற தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளான். அதாவது, ‘பாலகோட் பயங்கரவாத முகாமில் இருந்து ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார் தான் அந்த தாக்குதலுக்கு திட்டமிட்டான்’ என்று தெரிவித்துள்ளான். இந்நிலையில், இந்த தாக்குதல்களில் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பொய் கூறியுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதிகள் 05 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த 08 பேர் வீரமரணம் அடைந்தனர். அத்துடன், தோட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 05 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-இல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகையே உலுக்கியது. இதில் 166 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குறித்த இரண்டு சம்பவங்களிலும் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு தொடர்புள்ளது என இந்தியா ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது. ஆனால், இதனை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. அத்துடன், தங்கள் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசிய மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவன் கூறியுள்ளதாவது: திஹார் சிறையில் இருந்து தப்பிய பிறகு, மசூத் அசார் பாகிஸ்தானுக்கு வந்ததாகவும், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் அவனுக்கு தளமாக இருந்தது என்று கூறியுள்ளான். மேலும், அவன் இங்கிருந்து தான் டில்லி மற்றும் மும்பை தாக்குதலுக்கான திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தினான் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளான்.

ஆனால், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றது. இதனை நிரூபிக்கும்வகையில் பயங்கரவாதி மசூத் இலியாஸ் காஷ்மீரி யின் பேச்சு அமைந்துள்ளது. இதுவரை காலம் மறுப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தானுக்கு இந்த தகவல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த பாலகோட் பயங்கரவாத முகாம் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


