தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நேற்று (25) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாரத்தான் ஓட்டப் போட்டிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்து, பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகை கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையொட்டி அரிச்சல்முனையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்களுக்கான 10.கீ.மி மற்றும் பெண்களுக்கான 5.கீ.மி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் பங்கேற்க சுமார் 750-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இருந்தனர். ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு. முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மேலும் நான்காம் பரிசு முதல் பத்தாவது பரிசாக வெற்றி பெறுபவர்களுக்கு தலா ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசு தொகை பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததுடன், தொடர்ந்து மாரத்தான் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசுத்துறை அலுவலர்கள் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், ராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர், ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் நிருபர்


