மாத்தறை, திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபான்கொடெல்ல பகுதியில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1:45 அளவில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது டிப்பர் வாகனத்தின் சாரதி, பேருந்தில் பயணித்தவர்கள் உட்பட படுகாயமடைந்த 30 பேரையும் அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தினால் இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. விபத்து ஏற்பட்டவுடன் பேருந்தின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய சாரதியை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


