கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது போதைப்பொருள் கடத்தல்காரரான மத்துகம ஷான் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய இரண்டு பெண்கள் உட்பட நால்வரையும் பிரதான துப்பாக்கிதாரியையும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மித்தெனிய பிரதேசத்திற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.
அக் காலப்பகுதியில் இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது “மத்துகம ஷான்” என்பவர் என தெரியவந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு தெரிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தி வழங்கி வரும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுத்து சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.


