நமது நிருபர்
மன்னார் பள்ளிமுனை பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த உணவகம் ஒன்றின் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் நகர பகுதிக்குள் தொடர்ச்சியாக உணவகங்களின் சுத்தம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மற்றும் மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து உணவகங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மன்னார் பள்ளிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது நீண்ட நாட்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சுகாதார குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த உணவகம் மற்றும் உணவக உரிமையாளருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக அசுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டமை, களஞ்சியப்படுத்தப்பட்டமை,பரிமாறப்பட்டமை,கையுறை,தலையுறை அணியாமை கழிவுகள் ஒழுங்காண முறையில் அகற்றப்படாமை உள்ளடங்களாக பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள், வெதுப்பகங்கள் மீது சுகாதாரத்துறையினரால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


